சுமார் 365 மில்லியன் மக்கள் ஆங்கில மொழியை தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். தவிர, இரண்டு பில்லியனுக்கும் மேலானவர்கள் ஆங்கில மொழியை கற்கிறார்கள், பேசுகிறார்கள் தமது இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக. நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால் உங்களை கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள் புரிந்துகொள்வார்கள். பிறகு ஏன் வேறு எந்த அன்னிய மொழியையும் நீங்கள் கற்க வேண்டும்? கற்பதால் நேரம் தானே வீணாகிறது? நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பேசிய போது கறுப்பு தென்னாப்பிரிக்கர்கள் அவரைத் தீவிரமாக எதிர்த்தார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், "ஒருவருடன் அவர் புரிந்துகொள்ளும் மொழியில் பேசினால் அது அவர் மண்டையில் ஏறும். அதை அவர் சொந்த மொழியிலேயே பேசினால் அது அவர் உள்ளத்தில் உறையும்." ஆகவே, இதுதான் விஷயம்: நீங்கள் ஒருவரைக் கவர வேண்டுமானால், அவரின் உள்ளத்துடன் உரையாட வேண்டும். போப்பாண்டவர்களுக்கு அது தெரியும். இரண்டாம் ஜான் பால் சுமார் பத்து மொழிகளில் சரளமாக உரையாடினார், மேலும் ஒரு டஜன் மொழிகளின் அடிப்படைகளை அறிந்திருந்தார். அவர் எங்கே சென்றாலும் அவர்களுடைய தாய்மொழியிலேயே ஒருசில வாக்கியங்களாவது பேசி வாழ்த்துக்களைத் தெரிவிப்பார். அவர் பிரபலமடைந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். வேற்றுமொழி பேசும் மாமியார்களைக் கொண்டுள்ளவர்கள், கொள்ளப் போகிறவர்கள் கூட இதை அறிவார்கள். தமது காதலியிடம் ஆங்கிலத்தில் பேசுவார்கள், ஆனால் காதலியின் தாயாருடன் பிரச்சனையில்லாமல் பழகுவதற்காக எப்படிப்பட்ட கடினமான மொழியையும் கற்கத் துணிவார்கள் இளைஞர்கள். டச்சு மொழி உட்பட. (சிரிப்பு) இந்த உத்தி பெரும்பாலும் தவறுவதில்லை. ஏன்? நமது தாய்மொழியுடன் நமது குணாதிசயங்கள், அடையாளம் ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன மிக ஆழமாகவே நம்முடைய ஒட்டுமொத்த வரலாறும் நம் தாய்மொழியில் வேரூன்றியுள்ளது. பல நினைவுகள், உணர்வுகள் ஆகியவை சொற்களுடனும், கூற்றுகளுடனும் பிணைந்துள்ளன, நாம் கற்று வளரும் இலக்கணத்துடனும் கூட கலந்துள்ளன. ஆகவே, ஒருவருடைய தாய்மொழியை நீங்கள் கற்றால், அவருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களில் உண்மையான ஈடுபாடு கொண்டவராக உங்களைக் காட்டிக்கொள்கிறீர்கள். இதற்கு எந்த மாமியார் தான் மயங்கமாட்டார்? உங்கள் மொழியைக் காதால் கேட்கும் போது ஒருவித தொடர்பிலிருப்பதாய் உணர்கிறீர்கள். பயணங்களின் போது, பல நாட்கள், பல வாரங்கள் வேற்று மொழியையே பேசிக் கொண்டிருந்த பிறகு, விமானம் ஏறும் அந்தக் கணத்தில் விமானப் பணிப்பெண் உங்கள் மொழியிலேயே உங்களை வரவேற்கும்போது, நீங்கள் அறிவீர்கள், செல்லுமிடம் நம் தாயகம் என்று. தாய்மொழிக்கென ஒரு வாசம் இருந்தால், சிறுவயதில் நாம் உண்ட ஒரு இனிப்புப் பண்டம் போல் வாசம் வீசும், அல்லது கமகமக்கும் வீட்டுச் சாப்பாடு போல, பாட்டிமார்களின் வாசனைத்திரவியம் போல, கொஞ்சம் அந்துருண்டை போல. இதனால் தானோ என்னவோ செயற்கையாகக் கட்டமைக்கப்டபட்ட மொழிகள், எஸ்பரான்டோ போன்றவை, எதிர்பார்த்த அளவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை. எவ்வளவு தான் சாதுரியமாக வடிவமைக்கப் பட்டிருந்தாலும், கற்பதற்கு எளிமையாக, சுலபமாக இருந்தாலும், எந்த ஒரு செயற்கையான மொழியும் எந்த மக்களாலும் ஏற்கப்படுவதில்லை வேற்று மொழியாகவும் கூட ஏற்கப்படுவதில்லை. திட்டவட்டமாக கற்பிக்கப்டபட்டாலும் கூட, பெரிய அளவில், நீண்ட காலப் பயிற்சியாகவும் அது முயற்சி செய்யப்பட்டுவிட்டது. இயற்கை மொழிகளிலோ, பல இக்கட்டுகள் இருந்தாலும் கூட – எரிச்சலூட்டும் குறைகள், எழுத்துக் கூட்டலுக்கும் உச்சரிப்புக்கும் தொடர்பிலா தன்மை, சற்று அபத்தமான, சிக்கலான இலக்கணம் – இவை எல்லாம் இருந்த போதிலும், இயற்கையாக, மக்களிடையே பரிணமித்த மொழிகளையே நாம் கற்க விழைகிறோம். கட்டமைக்கப்பட்ட மொழிகள் நம் அறிவுடன் தான் பேசும். இயற்கை மொழிகள் வாசம் வீசும். நெல்சன் மண்டேலா, தான் ஆப்பிரிக்கான்ஸ் மொழியைக் கற்றால் தனது எதிரிகளை அறியலாம் என்று கருதினார். அவர் சொன்னார், "அவர்களை வெல்ல வேண்டுமானால் அவர்களது மொழியை, அவர்கள் ஆசாபாசங்களை, அவர்களது நம்பிக்கைகளை, அச்சங்களை அறிந்திருக்க வேண்டும்," என்று. அவர் அறிந்தார், வென்றார். ஆனால் இதெல்லாம் எதிரிகளுக்கு மட்டும் தானா என்ன? எல்லா வகையான மனித உறவுகளுக்கும் இது பொருந்தும். நிச்சயமாக மாமியார்கள் எதிரிகள் என்று .கடைசியாகச் சொல்வது நான்தான். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பு, போலந்து நாட்டினூடாக குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்தேன். கடைகளெல்லாம் மூடும் நேரம், சாப்பிட ஏதாவது வாங்க வேண்டியிருந்தது. இறுதியாக, சாலையின் மறுபுறத்தில் ஒரு பலசரக்கு அங்காடியைக் கண்டுபிடித்தோம். ஒரு U-திருப்பம் எடுத்தால் மட்டுமே அந்த இடத்தை விரைவாக அடைய முடியும். அதையே நான் செய்தேன். அது அபாயகரமானது, நிச்சயமாக சட்டவிரோதமானது. கார் நிறுத்துமிடத்தில், இஞ்சினைக் கூட நான் அணைக்கவில்லை – – டொக்-டொக் என்ற சத்தம் கேட்டது. காரின் ஜன்னல் வழியாகப் பார்த்த போது இரண்டுபேரின் கண்கள் தென்டபட்டன. அந்தக் கண்கள் போலீஸ்காரர்களுடையவை. எனக்கோ போலந்து மொழி சரளமாக வராது. இயல்பான சமயங்களிலும் அம்மொழியில் எளிய உரையாடலை என்னால் கொண்டு செல்ல முடியும். ஆனால் அந்த நிலைமையிலோ, என் மனதில் குற்ற உணர்ச்சி மிகுந்திருந்தது, போலீஸ்காரர்கள் வேறு என்னை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், எனக்குத் தெரிந்திருந்த கொஞ்சநஞ்ச போலந்து மொழியும் மறந்து விட்டது. அப்போதும் ஒரு கணநேரம் கூட ஆங்கிலத்தில் அவர்களுடன் பேசுவதை நான் நினைத்துப்பார்க்கவில்லை. ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு வசதியாக இருந்திருக்கலாம், ஆனால் போலீஸ்காரர்களுக்கு வசதியாக இருந்திருக்காது. ஆகவே, போலந்து மொழியிலேயே பேசத் தீர்மானித்தேன். எப்படி? என் மூளையில் ஓரத்தில் இருந்த கொஞ்சநஞ்ச போலந்து மொழியும் மறைந்துவிட்டது, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. ஒரு விஷயம் இருந்தது, நான் அடிக்கடி மனப்பாடம் செய்த ஒன்று, தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நான் ஒப்பிக்கக்கூடியது. ஒரு சிறுவர் கவிதை தான் அது, நோயுற்ற தவளை ஒன்றைப் பற்றியது. (சிரிப்பு) அது மட்டுமே என்னிடம் இருந்தது. அது கொஞ்சம் கிறுக்குத்தனமான காரியம் தான், ஆனாலும் உளறிக் கொட்டினேன்: (போலந்து மொழி) இளைத்துப் போன தவளை ஒன்று மருத்துவரிடம் சென்றது உடல் நலமில்லை என்றது. மருத்துவருக்கோ முதிர்ந்த வயது கண்ணாடியணிந்தாலே பார்வையறிவு." நான் போலீஸ்காரர்களைப் பார்த்தேன். அவர்களோ என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (சிரிப்பு) அவர்களில் ஒருவர் தலையைச் சொரிந்தார் என்று கூட நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு அவர்கள் புன்னகைத்தார்கள். அவர்கள் புன்னகைத்தார்கள். அது என்னைச் சற்று ஆசுவாசப்படுத்தியது, ஒரு சில பொருத்தமான வார்த்தைகள் கூட என் மனதில் மீண்டும் தோன்றின, அரைகுறை வாக்கியங்களாக திக்கித்திணறிப் பேசினேன், "மன்னிக்கவும், உணவு வேண்டியிருந்தது, இனிமேல் செய்யமாட்டேன்," என்பது போல். அவர்களும் என்னை விட்டுவிட்டார்கள். கடைக்குள் நான் விரைந்து செல்ல, அவர்கள் என்னை அழைத்தார்கள், (போலந்து மொழி) “Szczęśliwej podróży!" "தங்கள் பயணம் இனிமையாகட்டும்!" என்னுடைய நோக்கம் இதுவல்ல, அதாவது பல மொழிகளைக் கற்பதன் மூலம் உலகைச் சுற்றி வரலாம், சட்டத்தை உடைக்கலாம், தப்பிக்கலாம் என்பதல்ல. என் இந்த அனுபவம் சொல்லுவது இது தான், ஒரு சில வார்த்தைகள் கூட எளிமையான, அசட்டுத்தனமான சில வார்த்தைகள் கூட நேராக உள்ளத்தை அடைந்து இதயத்தை உருக்க முடியும். அந்த நோயாளித் தவளை பாட்டுக்கு மாற்று ஒன்றும் என்னிடம் இருந்தது. வேறு ஒன்று இருந்தது அதைப் போலவே நன்றாகத் தெரிந்தது: குடிப்பது பற்றிய பாடல் அது. (சிரிப்பு) ஆனால் அதனால் எனக்கு புன்னகைகள் கிடைத்திருக்காது காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள் இரத்தத்தை சோதனை செய்ய. ஏகப்பட்ட மொழிகளை நீங்கள் கற்க வேண்டியதில்லை, கற்பதை மிக ஆழமாகவும் கற்க வேண்டிதில்லை. சிறிதே கற்றாலும் அதற்குப் பயன் உண்டு. இதயத்தைத் தொடும் பத்தே சொற்களும் புரிதல் தரும் பல ஆயிரம் சொற்களை விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆங்கிலத்தை அவ்வப்போது பயன்படுத்தி இடைவெளிகளை நீங்கள் குறைக்கலாம் அல்லது இடையில் உள்ள அந்த எல்லையை நீங்கள் கடந்தும் செல்லலாம் உங்கள் புதிய நண்பரோ, எதிரியோ, எவராயிருந்தாலும் அவரை அவர் எல்லைக்குள் சென்று சந்திக்கலாம். மற்றவரின் மொழியைப் பேசுவதனால் நீங்கள் குறைந்துவிட மாட்டீர்கள், அது உங்களை நிறைவானவராகவே காட்டும். எந்தவொரு மனிதன் துணிச்சலுடன் எல்லைகளைக் கடக்க முயற்சி செய்கிறானோ, அவனே இறுதியில் வெல்வான். தவறு செய்வோம் என்று பயப்படாதீர்கள் தவறு செய்வது மனிதனின் இயல்பு. இந்த விஷயத்தில் ஒரு போனஸும் உண்டு: தவறு ஒன்றை நீங்கள் செய்யும் போது, உங்களுக்கு உதவி செய்ய, உங்களுடன் இணைய மற்றவருக்கு ஒரு வாய்ப்பளிக்கிறீர்கள். இவ்வாறாக, அவருடனான உங்கள் தொடர்பு மேலும் வலுவடையும். ஆகவே, மற்றவருக்கு உங்களைப் புரியவைப்பது மட்டுமே முக்கியமா, அல்லது இதயத்தில் இணைவதா? ஆங்கில மொழியைத் தொடர்ந்து கற்போம், பயன்படுத்துவோம். அதன் மூலம் பலதரப்பட்ட மக்களுடன் அளவளாவ முடியும், இங்கே TEDx நிகழ்ச்சியில் நாம் செய்வது போல. ஆங்கிலம் ஒரு சக்தி வாய்ந்த கருவி, தகவல் பறிமாறிக் கொள்ள, பன்னாட்டு கருத்தரங்குகளில் உலகளாவிய பிரச்சனைகளை விவாதிக்க. மேலும், 365 மில்லியன் மக்களின் இதயத்தை அடையும் நெடுஞ்சாலை ஆங்கில மொழி. அந்த 365 மில்லியன் மக்களுக்கு ஆங்கிலமே இனிய வாசனை வீசும் மொழி. ஆனால் அங்கேயே ஏன் நிற்க வேண்டும்? அதற்கும் மேலாக கொஞ்சம் முயற்சி செய்து ஏதாவது ஒரு வேற்றுமொழியாவது நாம் ஏன் கற்கக் கூடாது? உலகில் பல வகைகளில், சுவைகளில் இனிப்புப் பண்டங்கள் உண்டு. புதிதாக ஒன்றினை சுவைத்துத் தான் பார்ப்போமே! நன்றி. (கரவொலி)